ஜாதக பலனறிதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதக பலனறிதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 செப்டம்பர், 2023

தசா புத்தி கொண்டு பலனறியும் விதம்.. உதாரண ஜாதகங்கள் மற்றும் விளக்கங்கள்

ஜோதிட ரீதியாக மனித வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அப்போதைய தசா புக்தியுடன் தொடர்புடையதே ஆகும். ஜாதகரின் வயது,நடந்து முடிந்த தசா புத்திகள்,
நடப்பு தசா புத்திகள், பாவகங்களின் ஆதிபத்தியம் மற்றும் கிரகங்களின் காரகத்துவம் இவற்றின் அடிப்படையில் ஜாதகர் தற்போது என்ன பிரச்சினையில் இருப்பார் என்பதை யோசிக்க இயலும்.இனி வரக்கூடிய காலங்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் வரப்போகின்ற தசா புக்தியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.அதை ஒரு உதாரண ஜாதகத்தின் மூலமாக அறிந்து கொள்வோம்.
ரிஷப லக்னம், ரிஷப ராசியில் பிறந்த இந்த ஜாதகருக்கு தற்போதைய வயது 53. இவருக்கு குரு தசாவில் ராகு புத்தி முடிந்து நடந்து முடிந்திருக்கிறது.

ரிஷப லக்கினத்திற்கு ஆகாத அட்டமாதிபதி குரு, கடன், நோய், வம்பு, வழக்கு போன்ற பிரச்சனைகளை கொடுக்கக்கூடிய ஆறாம் வீட்டில் அமர்ந்து தசா நடத்திருக்கிறார்.
புத்திநாதன் ராகுவும் பத்தில் நின்று (பத்தாம் அதிபதி சனி நீசம் பெற்ற நிலையில்) புத்தி நடத்தியிருக்கிறார்.

அந்த வகையில் ஆறில் நின்ற அட்டமாதிபதி குருவால் உடல்நலக்குறைவு மற்றும் நோய் சார்ந்த பிரச்சினைகளும், பத்தில் நின்ற,  நீசம் பெற்ற பத்தாம் அதிபதி சனியின் வீட்டில் நின்ற ராகுவின் புத்தியால் தொழில் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும் என்பதை முதலில் யூகித்துக் கொண்டேன்.

எட்டாம் அதிபதி சுபராகி ஆறாம் வீட்டில் (துலாம் வீடு) இருக்கும்பொழுது கண்டிப்பாக நோய் சார்ந்த பிரச்சினைகள் இருக்கவே செய்யும்.

என்ன நோய் பாதிப்பு இருந்திருக்கும்?

இவருடைய ஆறாம் பாவகமான துலாம் கால புருச லக்னத்திற்கு ஏழாவது பாவகம். மனித உடல் உறுப்புகளில் உடலின் அடிவயிறு, தொப்புள், கிட்னி, பாலின சுரப்பிகள்,கர்ப்பப்பை இவற்றை சுட்டிக்காட்டும் இடம். ஆறாம் அதிபதியும் லக்னாதிபதியுமான சுக்கிரன் இங்கு சனியின் மூன்றாவது பார்வையில் மற்றும் செவ்வாயின் இணைவில் பலவீனமாக இருக்கிறார்.

கால புருஷ லக்னத்திற்கு ஏழாவது பாவகம் அதன் அதிபதி சுக்கிரனும் பாதிக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக ஜாதகருக்கு கிட்னி சார்ந்த பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட தசா புத்தியில் ஏற்படும் .
கடந்த மூன்று மாதங்களாக இவருக்கு நடந்து கொண்டிருக்கக் கூடிய புத்தியை பொருத்தவரையில் சனி தசாவில் சனி புத்தி ஆகும். தற்போதைய தசாநாதனும் புத்திநாதமான சனி, இவருடைய ஆறாம் வீட்டு அதிபதி சுக்கிரனையும் 6 ஆம் வீட்டையும் பார்க்கின்றார்.முழு சுபரான அட்டமாதிபதி குருவும் ஆறில் அமர்ந்து நோயை உறுதிப்படுத்துகிறார்.
பொதுவாக சுப கிரகங்கள் ஆறாம் வீட்டில் இருப்பது சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும்.ஆகவே இவருக்கு ஆறாம் வீட்டையும், ஆறாம் வீட்டு அதிபதியையும் பார்த்த சனி புத்தி, ஆரம்பித்த பிறகு கிட்னி மற்றும் அடி வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டீர்களா என்று கேட்டேன்.ஜாதகர்  கிட்னியில் கல் இருப்பதன் காரணமாக தற்போது ஒரு அறுவை சிகிச்சை செய்தோம் என்றார்.அறுவை சிகிச்சையை குறிக்கும் சனி மற்றும் செவ்வாய் சுக்கிரனுடன் தொடர்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் சரியாவதற்கு நிறைய தண்ணீர் குடிப்பதையும், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு முறைகளை பின்பற்றுவது நல்லது. அதோடு
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் சென்று வர சொன்னேன். அங்குள்ள நடராஜர் தலம் சிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாக கோவில் உள்ளது என்பதால் அங்கு சென்று வர அறிவுறுத்தினேன்.

அடுத்ததாக தொழிலிலும் வருமானம் இல்லை. தற்போதைய  தொழிலை மாற்றலாமா என்றார்.

இவரது பத்தாம் பாவகாதிபதி சனி லக்னத்திற்கு 12ல் அமைந்து நீச நிலையில் தசாபுத்தி நடத்துகிறார். குரு பார்வை சனிக்கு இருப்பது போல் தோன்றினாலும் டிகிரி அடிப்படையில் பார்வையில் வித்தியாசம் உண்டு. தசாநாதன் சனி, புதனுடன் இணைந்து இருந்தாலும் சனி தரக்கூடிய பாதிப்புகளை பெரிய அளவில் புதனால் தடை செய்ய இயலாது. புதன் இவருக்கு இரண்டாம் வீட்டுக்குரிய தனாதிபதி என்பதாலும் தசாநாதன் சனி இரண்டாம் வீட்டை பார்ப்பதாலும் வருமானம் மற்றும் பண விஷயத்தில் சனி புத்தி முடியும் வரை பிரச்சனைகள் இருக்கவே செய்யும்.

தொழில் மாற்றம் செய்யலாமா?

முதலில் இவர் எந்த தொழிலில் இருந்திருப்பார் என்பதை பார்ப்போம்.

இவருடைய ஜாதகத்தில் பத்தாம் அதிபதியான சனி, தனாதிபதியான (இரண்டாம் அதிபதி) புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். அந்த வகையில் சனிக்குறிக்கக்கூடிய காரகத்துவம் சார்ந்த தொழில்களே இவருக்கு வருமானத்தை தந்திருக்கும்.

சனி நின்ற மேஷம் நில ராசி, கடின உழைப்பை சுட்டிக்காட்டக்கூடிய செவ்வாயின் வீடு.அந்த வகையில் சனி குறிக்கக்கூடிய உடல் உழைப்பு சார்ந்த இரும்பு, பட்டறை, கட்டிட வேலை, விவசாயம் சார்ந்த பணிகளே அமைந்திருக்க வாய்ப்பு உண்டு என்றேன்.எங்களுடைய பரம்பரைத் தொழில் தச்சு வேலை என்றும் எனது அப்பாவிற்கு பிறகு நானும் அந்த தொழிலையே தற்போது வரை செய்து வருகிறேன் என்று கூறினார்.(ரிஷப லக்கினத்திற்கு சனி தந்தையை சுட்டிக்காட்ட கூடிய ஒன்பதாம் அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது)
தற்போது சனி தசா நடப்பதால் உடல் உழைப்பு சார்ந்த தச்சு வேலையையே தொடர்ந்து செய்வீர்கள். அந்த தொழில் செய்வதும் நன்மைதான் என்று சொல்லினேன்.

ஆனால் முன்பு போல் வேலை கிடைப்பதில்லை என நொந்து கொண்டார். தற்போதைய புக்திநாதனான  சனி, தனஸ்தானமான இரண்டாம் வீட்டை பார்த்து, இரண்டாம் அதிபதி  புதனுடனும் சேர்ந்து புத்தி நடத்துவதால் கோச்சார ரீதியாக ராகுவும் ரிஷப ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருப்பதால் பணரீதியான பிரச்சினைகள் இருக்கவே செய்யும். அக்டோபருக்கு பின்பு கோச்சார ராகு ரிஷப ராசிக்கு இலாப ஸ்தானத்திற்கு இடம் பெயர்வதால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலுள்ள பிரச்சனைகள் படிப்படியாக அகலும் என்றேன்.

சனி அந்தரத்திற்கு பின்பு வரக்கூடிய தனாதிபதி புதன் அந்தரமும் (புதன் இரண்டாம் வீட்டுடன் பரிவர்த்தனையாவதால்) பண விஷயங்களில் உள்ள பிரச்சனைகள் சரியாகும் என்றேன்.

தசாநாதன் சனிக்குரிய சில வாழ்வியல் பரிகாரங்களை பின்பற்ற சொன்னேன். அதோடு சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வது தொழில் இருக்க கூடிய தடைகளை விலக்கும் என்று கூறி அனுப்பி வைத்தேன்.

இதிலிருந்து நடப்பு தசா புத்திகள் ஜாதகருடைய வாழ்வில் எது மாதிரியான தாக்கங்கள் ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இலக்னம் முதல் 12 பாவகங்கள் குறிக்கக்கூடிய விஷயங்கள் கிரகங்களின் காரகத்துவ விஷயங்கள், தசாபுக்தி பலன் தரும் விதம் இவற்றை தெளிவாக அறியும் பொழுது ஜாதகருடைய நடந்து முடிந்த, நடப்பு தசா புக்திகளின் நிலை ஜாதகருக்கு தற்போது என்ன பிரச்சனைகள் இருக்கும் என்பதையும்,
வரப்போகின்ற தசா புத்திகள் ஜாதகருக்கு எப்படி இருக்கும் என்பதையும் கணிக்க முடியும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741


திங்கள், 29 நவம்பர், 2021

ஜாதகரின் தற்போதைய நிலை என்ன? தசா புத்தி மூலம் கண்டறிவது எவ்வாறு? உதாரண ஜாதக விளக்கம்

நடப்பு தசா புத்தியை வைத்து ஜாதகர் எது மாதிரியான சூழலில் இருப்பார் என்பதை தெளிவாக கண்டறிவது எவ்வாறு? 



ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை  தனிநபர் ஜாதகத்தில் நடப்பிலுள்ள தசா புத்திகளே அவருடைய வாழ்வில் நடைபெறக்கூடிய சம்பவங்களை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்திகள்,வயது இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஜாதகர் எது மாதிரியான பிரச்சனைகளை கடந்து வந்திருப்பார் என்பதை ஓரளவு யூகிக்க இயலும்.

அதை ஒரு உதாரண ஜாதகத்தின் வாயிலாக கண்டறிவோம்.

ஜாதகம் பார்க்க வந்திருந்த நபர் தன்னுடைய சகோதரனுடைய ஜாதகம் என்று சொல்லி என்னிடம் கொடுத்தார்.

தனுசு லக்னம், விருச்சிக ராசியில் பிறந்த அந்த ஜாதகருக்கு தற்பொழுது நடப்பில் உள்ளது சூரிய தசையில் ராகு புத்தி...
இந்த ஜாதகத்தில்  தசாநாதன் சூரியன் ஒன்பதாம் அதிபதியாகி ஆட்சி பெற்ற நிலையில், பத்தாம் அதிபதி புதனுடன் இணைந்து   தர்மகர்மாதிபதி அமைப்பில்  தசா நடத்துகின்றார். அந்த வகையில் சூரிய தசா ஆரம்பமானது ஜாதகருக்கு நன்றாகவே இருந்திருக்கும்.
தசாநாதன் சூரியன் தர்மகர்மாதிபதி யோக அமைப்பில் உள்ளதாலும் 11-க்குடைய சுக்கிரனுடன் இணைந்து உள்ளதாலும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வைத்திருக்கும்.

ஆனால் ஜாதகரின்  தற்போதைய நிலையைப் பற்றி அறிய நடந்து கொண்டிருக்கின்ற புத்தியை கவனித்தாக வேண்டும் புத்திநாதன் ராகு ஆறாமிடத்தில் இருக்கின்றார்..

இந்த ஜாதகத்தை பார்த்த பின்பு ஜாதகர் கடுமையான உடல்நல மற்றும் மனநல பாதிப்பில் இருக்கிறாரா? என்று கேட்டேன் வந்து இருப்பவரும் ஆம் என்றார்.

ஏனெனில் ஆறில் நின்ற ராகு பாதகாதிபதி, மாரகாதிபதி அஷ்டமாதிபதி தொடர்புகளை பெற்றதே இதற்கு காரணமாகும்.

ராகு தசாவிற்கான அல்லது புத்திக்கான பலன்களைக் கவனிக்கும்போது ராகுவுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களின் நிலையை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். 
ஏனெனில் நிழல் கிரகங்களான ராகு,கேதுக்கள் தனக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களின் பலனையும் தன்னுடைய தசாபுக்தி காலங்களில் எடுத்துச் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜாதகத்தில் ராகுவுக்கு  கேந்திரத்தில், (ராகுவிற்கு நான்கில்) சுக்கிரன் மற்றும் புதன், சூரியன் இணைந்துள்ளனர்.

இந்த ஜாதகத்தில் புதன் 7ம் அதிபதியான பாதாகதிபதியாகவும், சுக்கிரன் பதினொன்றாம் அதிபதியாகி மாராக அதிபதியாகவும் செயல்படுவார்.

அந்த வகையில் ஆறாம் வீட்டில் நின்ற ராகு தனக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களின் பலனை எடுத்துச் செய்யும் பொழுது ஜாதகருக்கு உடல் ரீதியான நோய் பாதிப்பை தீவிரமாக கொடுத்து இருப்பார்.
ஏனெனில் எப்போது தசாநாதன் அல்லது புத்திநாதனுக்கு  எப்போது பாதகாதிபதி, மாரக அதிபதி, அஷ்டமாதிபதி தொடர்பு ஏற்படுகின்றதோ அந்த தசா அல்லது புத்தி,  ஜாதகரின் லக்னம், லக்னாதிபதியின்  பலம் மற்றும் பலவீனத்திற்கு ஏற்ப உடல் நல பாதிப்பு, ஆயுள் பயம், ஆயுள் பாதிப்பு போன்றவற்றை ஜாதகருக்கு தரும் என்பது விதியாகும்.

இந்த ஜாதகத்தில் ராகுவிற்கு மற்றொரு கேந்திரத்தில், (ராகுவிற்கு ஏழில்) எட்டாம் அதிபதியான (அட்டமாதிபதி)சந்திரன் நீசம் பெற்ற  நிலையில் இருக்கின்றார்.
ராகு வாங்கிய சாரம் எட்டில் நின்ற நீசம் பெற்ற செவ்வாயின் சாரமாகும். 
அந்த வகையில் இந்த ராகு புத்தி, ஜாதகருக்கு உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகளை தந்திருக்கும்.
 இங்கே மனரீதியான பாதிப்பு என்று சுட்டிக் காட்டுவதற்கான காரணம் ராகுவிற்கு கேந்திரமான, ராகுவிற்கு ஏழாவது வீட்டில், லக்னத்திற்கு பன்னிரண்டில் மனோக்காரகனான சந்திரன் நீச நிலையில் கேதுவுடன் இணைந்து இருக்கின்றார்.

மனோகாரகனான சந்திரன் பாதிப்படைந்த நிலையில் ராகு கேதுவுடன் மிக நெருங்கிய நிலையில் இருக்கும்போது தொடர்புடைய தசா புக்தியில் ஜாதகருக்கு மன ரீதியான பாதிப்புகளை தருவார்.
இந்த ஜாதகத்தை பொருத்தமட்டில் மனரீதியான பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் நோய் குணமாகவில்லை என்ற கவலைதான்.

லக்னம் வர்க்கோத்தமம் பெற்று இருப்பதாலும், 8-க்குடைய சந்திரன் பரிவர்த்தனை பெற்று, மறைமுகமாக ஆட்சிபெற்ற நிலையில் இருப்பதாலும் ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டை ,குரு தனது 9ம் பார்வையால் பார்ப்பதால் ஜாதகருக்கு ஆயுள் பலம் உண்டு என்பதும் தெளிவாகிறது.

அந்த வகையில் ராகு புத்தி முடியும் வரை ஜாதகருக்கு உடல் ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகள் இருக்கும். 

மனோகாரகனான சந்திரன் நீசம் பெற்ற நிலையில் கேதுவுடன் இணைந்து உள்ளதால், ஜாதகர் மனதை தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டியது இந்த இடத்தில் அவசியமாகிறது.

மனதினை தைரியமாக வைத்துக் கொள்வதன் மூலமாகவும், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் வாயிலாகவும்  ஜாதகர் நோய் பாதிப்பிலிருந்து மீள இயலும்.


ஜாதகரின் மன பலத்தை பெருக்கக் கூடிய வகையில் திங்கட்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வது, சங்கடஹரசதுர்த்தி விரதம் இருப்பது, மூன்றாம் பிறை தரிசனம் காண்பது போன்றவை ராகு புத்தியை  எதிர்கொள்வதற்கான மன ஆற்றலை ஜாதகருக்கு வழங்கும்.
இந்த பரிகாரத்தை ஜாதகரால் செய்ய இயலாத போது  ஜாதகரின் இரத்த உறவுகள் நம்பிக்கையோடு செய்து வருவது நல்லதாகும்.
புத்தி நாதனான 6 நின்ற ராகு தரும் பாதிப்பானது, குறைவதற்கு
 ஜாதகருடைய பிறந்த நட்சத்திர தினமன்று காளஹஸ்தி சென்று காளஹஸ்தி நாதரை வழிபட்டு வருவது நல்லதாகும்..
இந்த பரிகாரங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை நம்பிக்கையோடு கடைபிடித்து வருவதன் வாயிலாக  நோய் நீங்கி நலம் பெறுவர் சொல்லி நம்பிக்கையூட்டி, ஜாதகம் பார்க்க வந்தவரை அனுப்பி வைத்தேன்.

காளஹஸ்திநாதர் ஜாதகருக்கு நல்ல  உடல்நலத்தினை நல்குவார்..
நம்புவோம்...
நன்றி...
Astrologer
ப இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138









செவ்வாய், 16 நவம்பர், 2021

கலப்பு திருமணம் - ஜாதக அமைப்பு

ஜாதக பலனறிதல்
கலப்பு திருமணம் ஜாதக அமைப்பு :-

ஒருவருடைய ஜாதகத்தில் இலக்ன, இராசிக்கு ஏழாமிடம், ஏழாம் வீட்டு அதிபதியுடன், வலுப்பெற்ற சனி அல்லது செவ்வாய் தொடர்பு பெறும் பொழுது அவர் கலப்பு திருமணம் செய்ததற்கான அமைப்பு உண்டாகும். நடைமுறையில் சனி அல்லது செவ்வாய் தொடர்புடைய தசா புத்திகளும் இருக்க வேண்டும்.
அந்த வகையில் ஒரு உதாரண ஜாதகத்தைப் பார்ப்போம்..

மீன லக்னம், தனுசு ராசியில் பிறந்த இவருக்கு லக்ன, ராசிக்கு 7-ஆம் வீட்டு அதிபதியாக புதன் விளங்குகின்றார்.
இலக்னத்திற்கு  ஏழில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய புதன், வர்கோத்தமம் மற்றும் திக்பல நிலையில் இருக்கக்கூடிய வலுப்பெற்ற சனியுடன் இணைந்து உள்ளார்.

இங்கே குறிப்பாக சனி வர்கோத்தமம் அடைந்த பாதம் செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் ஆகும்.
அந்த வகையில் 7-ஆம் வீடு மற்றும் ஏழாம் அதிபதிக்கு சனி மற்றும் செவ்வாய் தொடர்பு இருப்பது என்பது தெளிவாகின்றது.

நடைமுறையிலுள்ள தசா புத்திகளுடன் செவ்வாய், சனி தொடர்பு பெறுவதால் ஜாதகர் கலப்புத் திருமணம்  செய்தார் என்பது உறுதியாகிறது.

அந்த வகையில் இன்று ஜாதகம் பார்க்க வந்த, மேற்கண்ட ஜாதக நபரிடம் நீங்கள் கலப்பு திருமணம் செய்தவரா? என்று கேட்டவுடன் அவரும் ஆமாம் என்று ஒத்துக்கொண்டார்.

நிறைவாக இலக்ன ராசிக்கு 7-ஆம் இடம், 7-ஆம் வீட்டு அதிபதியுடன் வலுப்பெற்ற  நிலையில் இருக்கக்கூடிய சனி மற்றும் செவ்வாய்
தொடர்பு பெற்று, தசா புத்திகளும் ஒத்துழைக்கக் கூடிய பட்சத்தில் ஜாதகர் கண்டிப்பாக  கலப்புத் திருமணம் செய்வார் என்பது தெளிவாகிறது.

சனி மற்றும் செவ்வாய் லக்னத்துக்கு ஏழாமிடம், ஏழாம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு பெறும்போது ஜாதகர் ஜாதி மாறியும், ராகு கேதுக்கள் ஏழாம் இடம் 7-ஆம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு பெறும் போது ஜாதகர் தன்னுடைய மதம் மாறியும்  திருமணம் செய்வார்...

நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N

புதன், 23 டிசம்பர், 2020

தசா புத்தி கொண்டு பலனறியும் விதம்.. உதாரண ஜாதகங்கள் மற்றும் விளக்கங்கள்

தசா புக்தி பலனறிதல்-1
 
நடப்பில் உள்ள தசாபுத்தியினைக் கொண்டு ஜாதகர் எந்த பிரச்சினையில் இருப்பார் என்பதை கண்டறிந்து பலன்களை எப்படி கணிப்பதென்று பார்ப்போம்.

தசாநாதன் எப்படி பலன் தருவார் என்பதை பொறுத்தளவில் 
தசாநாதன் பெற்ற நட்சத்திரத்தின் அதிபதி எங்குள்ளார் என்பதை  கவனிக்க வேண்டும்.
சாரநாதன் இரு ஆதிபத்தியம் பெற்ற கிரகமா அல்லது  ஒரு ஆதிபத்தியம் பெற்று உள்ள கிரகமா என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
தசாநாதன் பெற்றுள்ள சாரத்தின் அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டின் வழியாக தன்னுடைய ஆதிபத்திய பலன்களை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தசாநாதன் மற்றும் புத்தி நாதன் உடன் இணைந்து உள்ள கிரகங்கள், தசாநாதன் மற்றும் புத்தி நாதனை  பார்க்கின்ற கிரகங்கள், தசாநாதன் மற்றும் புத்தி நாதன் பார்க்கின்ற மற்ற கிரகங்களின் நிலையையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
ஏனெனில் இதை ஒட்டியே  ஜாதகரின் எண்ண ஓட்டங்கள் அல்லது கேள்விகள் அமையக்கூடும்.
இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு அறிவோம்.
மீன லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து கொண்டிருக்கிறது. புத்திநாதன் கேது இலக்னாதிபதி மற்றும் பத்தாம் இடத்து அதிபதியான குரு உடன் இணைந்துள்ளார். கேதுவும் 10 ஆம் அதிபதியான குருவின் சாரத்தில் இருப்பதால் கேள்வி பெரும்பாலும் உத்தியோகம்,தொழில், வேலைவாய்ப்பு தொடர்புடையதாகவே இருக்கும்.
தசாநாதன் ராகுவும் ஆறாம் அதிபதியான சூரியனின் சாரம் பெற்று உள்ளார் என்பது வேலைக்கான கேள்வி என்பதை தெளிவுபடுத்தியது.
ராகு மற்றும் கேதுவின் தசா புக்தி பலன்களை கணிக்கும் பொழுது ராகு மற்றும் கேதுவின் சாரத்தில் நின்ற மற்ற கிரகங்களின் நிலையையும் கவனத்தில் கொண்டாக வேண்டும். அந்த வகையில் சுக்கிரன் இந்த ஜாதகத்தில் கேதுவின் சாரமான அஸ்வினியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே கேள்வி சுக்கிரனின் காரகத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். சுக்கிரன் இந்த ஜாதகத்தில் 2-ஆம் இடமான குடும்பஸ்தானத்தில் இருப்பதாலும் ஜாதகரும் திருண வயதினில் இருப்பதால் பெரும்பாலும் திருமணம் தொடர்பான கேள்வியாக இருக்கும் என்பதை யூகித்தோம்.
ஜாதகம் பார்க்க வந்தவரின் கேள்வியும் உத்தியோகம், திருமணம் தொடர்புடையதாகவும் தாயாரின் உடல்நிலை பற்றியதாகவும் இருந்தது.

பொதுவாக சர ராசிகளில் நின்ற  ராகு கேதுக்களின் தசா புத்திகள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றத்தை உண்டாக்க வல்லது. அந்த மாற்றம் நல்லதா?  (அ) கெட்டதா? என்பது அந்த ஜாதகத்தில்  ராகு மற்றும் கேதுவின் நல்ல கெட்ட நிலையைப் பொறுத்தது.
அவ்வகையில் புத்திநாதன் கேது, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடத்தில்  இருப்பதுடன் இலக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான குருவுடன் கேது இணைந்து கேளயோகத்தில் இருக்கின்றார். மேலும் வீடு கொடுத்த சந்திரன் மூலத்திரிகோண நிலையில் வலுவுடன் இருப்பதால் கேது புத்தி அவரின் வாழ்க்கையில்  ஒரு நல்ல மாற்றத்தினை உண்டாக்கவல்லதால்  கேது புத்தி அல்லது 
அதனைத் தொடர்ந்து வரக்கூடிய கேதுவின் சாரம் பெற்ற சுக்கிர புத்தியில் உத்தியோக ரீதியாக நல்ல முடிவை பெறுவார்.
சுபக்கிரகங்கள் தனஸ்தானமான இரண்டாமிடத்தில் இருப்பது வருமானத்தை உயர்த்தும் என்ற வகையில்  இரண்டினில் நின்ற சுக்கிர புக்தி அவருக்கு வருமானத்தினை உயர்த்தும் என்ற வகையில் நல்ல வேலை கிடைக்கவழி செய்யும்.
கேது புத்தி முடிவடைந்த பின்னர் வரும் சுக்கிர புத்தியில் திருமணம் நடக்கும்.
சுக்கிரன் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருப்பது குடும்பத்திற்கு புதிய நபரின் வருகை உறுதிப்படுத்துகிறது.

தாயாரின் உடல்நிலையை குறித்த கேள்வியை  பொருத்தளவில கேதுவின் பதினொன்றாம் பார்வை, சந்திரனுக்கு இருப்பதாலும்,
சந்திரனுக்கு பிடிக்காதவரான கேது கடகத்தில் இருப்பதும் தாயாரின் உடல்நிலையில் சிறு பிரச்சினைகளை  உண்டாக்கியுள்ளது.
தாயாரைக் குறிக்கும் 4-ஆம் இடத்து அதிபதியான புதன்,திக்பல  நிலையில்  குருவின் பார்வையில் இருப்பதுடன் காரகத்துவ ரீதியாக சந்திரன் வலுப் பெற்றுள்ளதாலும் கோச்சார ரீதியாக குருவின் பார்வை பிறப்பு ஜாதகத்தில் உள்ள சந்திரனுக்கு இருப்பதால்
அன்னையின் உடல்நல 
 பிரச்சினைகள் மிக விரைவில் சரியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138